சீனா: நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தானில் பொறுப்பான பதவிகளில் உள்ள தலைவர்களிடமிருந்து வரும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் அதிகரித்து வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. பிரம்மோஸ் ஏவுகணை, ரஃபேல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனைத்து வகையான பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்பட வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
The post பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: சீனா தகவல் appeared first on Dinakaran.