மதுராந்தகம் அருகிலுள்ள கருங்குழியில் இருந்து பூஞ்சேரி வரை 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் மூலம் டெண்டர் கோரியிருப்பது வரவேற்கத்தக்க முடிவாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் படிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள் குவியும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் மக்கள்தொகை ஒரு கோடியை எட்டியுள்ளது. இதுதவிர, அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் தினந்தோறும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.