வாழப்பாடி: வாழப்பாடி அருகே பெண் அழைப்புக்கு சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள சேசஞ்சாவடி பகுதியில் இருந்து பெண் அழைப்பதற்காக அஸ்தம்பட்டி நோக்கி ஒரு கார் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. அந்த காரை பரத் (37) என்பவர் ஓட்டினார். காரில் 3 பேர் பயணித்தனர். இந்த கார், இரவு 11 மணியளவில் மேட்டுப்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென புகை வந்தது.
இதைப்பார்த்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்து கொண்டு காரில் இருந்த 3 பேரும் வேகமாக கீழே இறங்கினர். இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் கார் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண் அழைப்புக்கு சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்தது 4 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.