புதுடெல்லி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நிரந்தரமான அடிப்படைக் கட்டமைப்புகள் அவசியம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். மேலும், உ.பி. பாஜக அரசையும் அவரை கடுமையாக விமர்சித்தார்.
உ.பி.யின் எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (பிப்.24) தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை எம்.பி.யும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: “மகா கும்பமேளா என்பது துறவிகள், மத தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு மத நிகழ்வு. ஆனால், பாஜக அரசாங்கம் அதை ஓர் அரசியல் நிகழ்வாக மாற்ற வேலை செய்தது. மகா கும்பமேளாவை சுமுகமாக நடத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. அவர்களால் கூட்டத்தை நிர்வகிக்கவோ, பக்தர்களுக்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்யவோ, குளிப்பதற்கான சுத்தமான தண்ணீரை வழங்கவோ முடியவில்லை.