சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வருமான வரி விலக்கு உயர்வு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள், சிறு தொழில்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. பிஹார் மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்களால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என கூறுவதைவிட பிஹார் மாநில நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழகத்துக்கு நதிநீர் இணைப்பு, ரயில்வே திட்டம், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.