தமிழ்நாட்டின் மையத்தில் உள்ள மிக சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள இந்த வறண்ட பூமியில் தான், மக்காச்சோள சாகுபடியிலும், பருத்தி சாகுபடியிலும், சின்ன வெங்காய சாகுபடியிலும் மாநில அளவில் முதலிடம் பெற்று மலைக்க செய்து வருகிறது. மாநில அளவில் அதிகப்படியான பாலினை உற்பத்திசெய்து வெண்மை புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொறியியல் வேளாண்மை, கலை அறிவியல், கல்வியியல் என 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கொண்டு கல்விப் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொழிற் புரட்சியை ஏற்படுத்த வித்திட்டது திமுக ஆட்சி தான். எறையூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் சர்க்கரை ஆலையையும், 13 ஆண்டுகளுக்கு முன்பு நாரணமங்கலத்தில் டயர் தொழிற்சாலையையும் கொண்டுவந்து, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்த திமுக அரசுதான்.
கடந்த 2023ம் ஆண்டு எறையூரில் இளைஞர்களின் எதிர்கால கனவை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியதோடு, ஓராண்டில் அதன் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது, திமுக அரசு. தேசிய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காலணிகளை பொறுத்த வரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிகளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சாத்திய கூறுகளும் உள்ளன.
இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது. இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்கு விக்கும் வண்ணம், 2022 ஆக.23 அன்று “தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை -2022” தமிழ்நாடு முதலமைச்சரால் வெளியிடப்பட்டது. பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற்பூங்காவை அமைத்தது. இப் பூங்காவில் இத்தொழிற் சாலை அமைக்கப் பட்டுள்ளதன் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும். இந்நிறுவனம், 2028ம் ஆண்டிற்குள் ரூ.2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 நவம்பர் 28ல், பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் புதிதாக அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய ஓராண்டில் துல்லியமாக அதாவது 2023 நவம்பர் 29ல் ரூ400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமாக நிறுவப்பட்ட, ஜேஆர் ஒன் காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று முதலே அங்கு க்ரோக்ஸ் நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த காலணிகள் உற்பத்தியைத் தொடங்கி விட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, வீடுகளில் பயன்படுத்தவும் பயணங்களில் பயன்படுத்தவும், அலுவலகங்களில் பயன்படுத்தவும் ஏதுவாக, பல்வேறு ரகங்களில், பல்வேறு வண்ணங்களில், பல்வேறு விலைகளில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தனது உற்பத்தியை தொடங்கிய தொழிற்சாலை, தற்போது அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி ஆசியா கண்டத்தில் உள்ள பல்வேறு அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதியை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எவர்வான் கோத்தாரி புட்வேர் லிமிடெட் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிப்.26ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இங்கு பிரபல ஷூ நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் உற்பத்தியை தொடங்க உள்ளது. கரூரில் டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி, கொசுவலை போன்ற மூன்று முக்கிய தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், மினி டைடல் பார்க் அமைக்கப்படுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தொழில் வளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார். இதனால் கரூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கரூரில் இருந்து கோவை சாலை, திண்டுக்கல் சாலை, கரூர் மாநகராட்சியின் புறநகர்ப் பகுதிகள் இதில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த ஆலை அமைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவு உள்ளது. தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலை துவங்கும் போது, ஆலை துவங்கப்படும் பகுதிகளை சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பை பெறுவார்கள். தனிநபரின் வருமானமும் அதிகரிக்கும், பொருளாதாரமும் மேம்படும். தமிழ்நாடு முதல்வர் செய்துள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக கரூர் மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியடையும். இதன் காரணமாக கருர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆலை அமைக்கப்படுவதற்கான இடம் மற்றும் திட்ட அறிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் கலந்து பேசி, எந்த பகுதியில் ஆலை அமைந்தால், அந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள் என்பது குறித்தும் விவாதித்து அதற்கான இறுதி வடிவம் கொண்டு வரப்படும். ேமலும், பெரம்பலூர் பாடலூர் பகுதியில் காலணி உற்பத்தி நிறுவனம் அமைக்க வாய்ப்பு உள்ளதாக ெதரிகிறது. பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,’’ என்றார்.
3 ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பீனிக்ஸ் நிறுவன தலைவர் உறுதி
இதுகுறித்து பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ரபீக் அகமது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பீனிக்ஸ் கோத்தாரி புட்வேர் லிமிடெட் நிறுவனமும், தைவானின் ஷூடவுன் நிறுவனமும் சேர்ந்து, பெரம்பலூரில் ஜேஆர் ஒன் புட்வேர் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இங்கு க்ரோக்ஸ் பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ரூ.1,761 கோடி முதலீடு செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த உற்பத்தி ஆலையில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் 2022 நவம்பரில் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, 2023 நவம்பரில் தொழிற்சாலையை திறந்தோம். அங்கு தற்போது 2,500 பேர் வேலை செய்கிறார்கள்.
அடுத்த முயற்சியாக கரூரில் 5 ஆயிரம் ேகாடியில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்தை தொடங்குகிறோம். எங்கள் குழுமத்தின் சார்பில் இன்னும் 3 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் வேலை செய்வார்கள். இதற்காக ஒத்துழைக்கும் தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். முதல்வர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தநாள் தோல் இல்லாத காலணியில் தமிழக அரசு முன்னிலையில் இருக்கிறது என்று ஒன்றிய அரசு கூறியிருப்பது உண்மையான ஒன்றுதான். நாங்கள் ஏற்கனவே தொடங்கிய ஒரு தொழிற்சாலையில் தற்போது 2,500 பேர் வேலை செய்கிறார்கள். இந்த வருட இறுதிக்குள் இந்த ஒரு ஆலையிலேயே மேலும் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்னும் 3 ஆலைகள் கட்டுவதற்கு தயாராகி வருகிறோம். இதனை 10 மாதத்தில் முடிப்பதாக முதல்வருக்கு வாக்கு கொடுத்துள்ளோம்.
அதிகமான வேலைவாய்ப்பு கொடுக்க கூடியது ஷூ தயாரிப்பு ஆலைகள். அதனால் வேலைவாய்ப்பில்லாத மாவட்டங்களை முன்னேற்ற தோலில்லாத காலணி தொழிலை வளர்க்க எங்களுக்கு தமிழ்நாடு அரசு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அது மிகவும் முக்கியம். இந்தியாவிலேயே காலணிகளுக்கென தனி கொள்கை வகுத்தது தமிழ்நாடு அரசுதான். இதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதால் எல்லோரும் வருகிறார்கள். நாங்கள் வெற்றிகரமாக 1 வருடத்தில் நடத்திக்காட்டியதால் இப்போது நிறைய நிறுவனங்கள் முன்வருகிறார்கள். எல்லோரும் வரவேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு இந்தநாள் ஒரு மைல்கல் நாளாகும். தமிழ்நாட்டின் தெற்கு பக்கம் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் காலணிகளை உருவாக்க பிரத்தியேகமான தொழில்துறை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு துணை தொழிற்சாலைகளும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* இந்தியாவிலேயே காலணிகளுக்கென தனி கொள்கை வகுத்தது தமிழ்நாடு அரசுதான். இதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதால் எல்லோரும் வருகிறார்கள்.
* அதிகமான வேலைவாய்ப்பு கொடுக்க கூடியது ஷூ தயாரிப்பு ஆலைகள். அதனால் வேலைவாய்ப்பில்லாத மாவட்டங்களை முன்னேற்ற தோலில்லாத காலணி தொழிலை வளர்க்க எங்களுக்கு தமிழ்நாடு அரசு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.
* பெரம்பலூர் தொழிற்சாலையில் 20 லட்சத்திற்கும் அதிகமான க்ரோக்ஸ் ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் தெற்கு பக்கம் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் காலணிகளை உருவாக்க பிரத்தியேகமான தொழில்துறை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு துணை தொழிற்சாலைகளும் அமைக்கப்படும்.
The post வளர்ச்சி பாதையில் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள்; காலணி தொழிற்சாலை புரட்சி: ரூ5,000 கோடி முதலீட்டில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.