விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இதன்மூலம் விண்வெளியில் பாரதம் சதம் அடித்திருக்கிறது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 460 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன.