சென்னைதான் ஒரு காலத்தில் தென்னிந்திய திரை உலகின் மையமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களுக்கான அனைத்துப் பணிகளும் இங்குதான் நடந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறியது. புதிய தொழில்நுட்பங்களும் யதார்த்தமான சினிமாவைப் படைக்கும் ஆற்றலும் கொண்ட இளம் படைப்பாளர்களின் வருகையும் அந்தந்த மாநில சினிமாவுக்கு வலு சேர்த்தன. ஒரு படத்துக்கான பணிகளுக்காக இன்னொரு மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை தொழில்நுட்பங்களின் வருகை வெகுவாக குறைத்தன. இருப்பினும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தும் வழக்கமும் இன்னும் புழக்கத்தில் இருக்கவே செய்கிறது.
அதுவும் பான் இந்தியா கலாச்சாரம் வந்தபிறகு அண்டை மாநில நடிகர்களும், பக்கத்து மாநில லொகேஷன்களும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இதனால் அனைத்து மொழிப் படங்களையும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் இந்திப் படங்களே அதிகம் திரையிடப்பட்டன. வாரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் திரையிடப்படும். வெள்ளை வயர் எனப்படும் கேபிள் டிவி வந்த காலத்தில் நிறைய தெலுங்கு டப்பிங் படங்கள் திரையிடப்பட்டது. சிரஞ்சீவி, நாகர்ஜுனா, டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ் நடித்த பல படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.