வயிற்றுப் பிழைப்புக்காக எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தண்டித்து வருகிறது. ஆனால், இந்திய – இலங்கை பாதுகாப்பு வேலிகளை எல்லாம் ‘தந்திரமாக’ தாண்டி இலங்கையிலிருந்து தங்கத்தையும் இங்கிருந்து போதைப் பொருட்களையும் கடத்திக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
இந்திய – இலங்கை கடல் பிராந்தியத்தில் காலம் காலமாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தாலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு கஞ்சா, போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், மஞ்சள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறைவான நாட்டிக்கல் மைல் தூரம் என்பதால் இந்தக் கடத்தலுக்கு கடத்தல் புள்ளிகள் பெரும்பாலும் ராமநாதபுரம் கடல் வழியையே பயன்படுத்தி வருகிறார்கள்.