சென்னை: பாமக எம்.எல்.ஏ. அருள் மற்றும் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இருவருக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழ்நாட்டு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவைச் சந்திக்க இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம், மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அருளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியும் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார். நாளை சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்த உள்ள நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அடுத்தடுத்து நெஞ்சுவலியால் பரபரப்பு: பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.