கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘அடலசன்ஸ்’ (Adolescence) என்கிற பிரிட்டிஷ் ஒடிடி குறுந்தொடர் பரவலான கவனத்தை ஈர்த்தது. 13 வயதான ஜேமி என்கிற சிறுவன், தனது வகுப்புத் தோழியைக் கொலை செய்துவிடும் கதையை இத்தொடர் விவரிக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்லாமல் உலகளவில் நிகழும் சிறார்களின் குற்றச்செயல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்திய தொடர் இது.
வன்முறைக் குற்றத்தில் சிறார் ஈடுபடுவதற்கான சிக்கலான உளவியல் – சமூகக் காரணங்களை இத்தொடர் ஆராய முற்பட்டதை ஆய்வாளர்கள் பலரும் வரவேற்றனர். காரணம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகச் சிறார்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. இந்தக் குற்றச்செயல்களில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவையும் அடங்கும்.