சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் 85 பயணிகள், 6 விமான ஊழியர்கள் மொத்தம் 91 பேருடன் நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும்போது, விமான சக்கர டயர்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் சென்னையில் தரை இறங்கி, ஓடுபாதையில் ஓடும் போது, பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன. அதோடு கூடுதல் முழு பாதுகாப்பு ஏற்பாடாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர், அதிரடி படையினர், ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இந்த பரபரப்பான நிலையில், விமானம் நேற்று காலை 5.44 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி, ஓடுபாதையில் ஓடி விமானம் நிற்க வேண்டிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு விமானத்தில் இருந்த 85 பயணிகளும், பாதுகாப்பாக பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறங்கி வெளியில் வந்தனர். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது விமான சக்கர டயர்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன், விமான பாதுகாப்புத் துறை விரிவான முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
The post அதிகாலை பரபரப்பான ஏர்போர்ட்; சென்னை வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 91 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.