வாஷிங்டன்: அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. உலக நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வரும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யுஎஸ்எய்டு) பல ஊழல்கள், முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், 60 ஆண்டு கால அந்நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக மூட முயற்சிக்கிறார். இதற்காக வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யுஎஸ்எய்டின் தலைமையகம் பூட்டப்பட்டு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிலும், உலகெங்கிலும் பணியாற்றும் யுஎஸ்எய்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் யுஎஸ்எய்டு நிறுவனத்தில் பணியாற்றும் 1,600 ஊழியர்கள் நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் யுஎஸ்எய்டு இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உலகெங்கிலும் 4,600 ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்கம் அமெரிக்க அரசுப் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
* மஸ்க் கெடு முடிந்தது
யுஎஸ்எய்டு மட்டுமின்றி எப்பிஐ, வெளியுறவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு, பென்டகன் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களையும் குறைக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக எலான் மஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் பதிவில், ‘‘அரசு ஊழியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் கடந்த வாரம் அவர்கள் முடித்த பணிகள், எட்டிய இலக்குகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை இழக்க நேரிடும்’’ என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மஸ்க்கின் கெடு முடிந்து நேற்று ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அறிக்கை அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என குழப்பிப் போய் உள்ளனர்.
The post அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்டம் ஆரம்பம் யுஎஸ்எய்டு ஊழியர்கள் 1600 பேர் டிஸ்மிஸ்: 4,600 பேருக்கு கட்டாய விடுப்பு அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.