புராண, சரித்திரக் கதைகள் அதிகம் உருவான ஆரம்பக் காலகட்ட சினிமாவில் சில திரைப்படங்கள், பெண்களை மையப்படுத்தியும் பாலியல் சார்ந்த விஷயங்களைக் கொண்டும் உருவாகி இருக்கின்றன. அதில் ஒன்று, ‘தாஸி அபரஞ்சி’. தேவதாசிபெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இந்தப் படம் அந்த காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது. கூடவே, சில பத்திரிகைகள் இதைத் துணிச்சலான படம் என்றும் பாராட்டின.
விக்கிரமாதித்தன் என்ற மன்னன் உஜ்ஜைனியில் ஆட்சி புரிகிறார். அங்குள்ள மகதபுரி எனும் ஊரில், பேரழகுகொண்ட அபரஞ்சி என்ற தேவதாசி வாழ்கிறார். 64 கலைகளிலும் தேர்ச்சிப் பெற்ற அவர், தன்னைப் பற்றிய பெருமை கொண்டவராக இருக்கிறார். தன்னை யாராவது மனதளவில் நினைத்தால் கூட ஆயிரம் பொற்காசுகளைக் கூலியாகக் கேட்பவர். ஆனால், அதிக பக்திகொண்ட அவர் கைலாசம் செல்ல வேண்டும் என்று இறைவனை நினைத்து தினமும் பிரார்த்தனை செய்கிறார்.