இந்த ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ருத்ர தாண்டவமாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா. அவரின் துல்லியத் தாக்குதலில் ஐபிஎல் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார் அபிஷேக்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்து மிரட்டியது. பிரியன்ஷ் ஆர்யா 36, பிரப்சிம்ரன் 42, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 82, நேஹல் வதேரா 27, மார்கஸ் ஸ்டாயினிஸ் 34 ரன்கள் குவித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிக அளவு ரன்கள் குவித்ததால் இலக்கை எட்டுவது கடினம் என ஹைதராபாத் ரசிகர்கள் முதலில் நினைத்தனர். ஆனால் ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்து அசத்தலான ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.