கோவை: அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வரும் அதிக வரி விதிப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் சிறிது காலம் சிரமத்தை எதிர்கொண்டாலும், தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என கோவை தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வார்ப்பட தேசிய அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, “பொருளாதாரத்தில் மிக உச்சியில் உள்ள வல்லரசு நாடுகள் கூட மற்ற நாடுகளின் உதவி இல்லாமல் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாத ஒரு நல்லரசு நாடு நமது இந்தியா. எனவே எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற வகையில் முடிவுகள் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது மேற்கொள்ளும் அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைளால் சிறிது காலம் சிரமப்பட்டாலும் கூடிய விரைவில் இந்த தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை” என்றார்.