திருப்பூர்: அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிக்கும் 50 சதவீதம் வரி விதித்திருப்பதன் காரணமாக, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு தொழில்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், கடந்த 27ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன.