பெய்சிங்: அமெரிக்க வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தக போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தயார் என சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிபர் டிரம்ப் புதிய வரி விதிப்புக்கள் மூலமாக பேரழிவு தரும் புதிய வர்த்தக போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு எதிரான அதிபர் டொனால்ட் டிரம்பின் 25 சதவீத வரிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் கனடாவின் எரிசக்தி பொருட்கள் 10 சதவீத இறக்குமதி வரிகளுக்கு உட்பட்டவை என்றும் அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பிப்ரவரி மாதம் சீன இறக்குமதி பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் விதித்த 10 சதவீத வரியானது 20 சதவீதமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு சீனா கூடுதலாக 15 சதவீத வரியை விதித்துள்ளது.
இது வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சீனாவின் சுங்க வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தக போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தயார் என சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக போர் ஏற்பட்டால் இறுதி வரை பார்த்துவிட சீனா தயார் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபென்டானில் என்ற வேதிப்பொருள் ஏற்றுமதி பிரச்சனைக்கு அமெரிக்கா தீர்வு காண விரும்பினால் பேசி தீர்ப்பதே சரியான வழி. சீனாவுக்கு சம அந்தஸ்து அளித்து அமெரிக்கா பேச்சு நடத்துவதே பிரச்சனையை தீர்க்க வழி என்று சீனா அறிவித்துள்ளது.
The post அமெரிக்க வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தக போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தயார்: சீனா அறிவிப்பு appeared first on Dinakaran.