அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் அமெரிக்காவுக்கு முதன்மை இடம் என்ற கொள்கையை உருவாக்கி அனைத்து விஷயங்களிலும் அவர்கள் நாட்டுக்கு எது நன்மையோ அந்த முடிவுகளை அறிவித்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை, இறக்குமதி மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாடு என முடிவுகளை எடுத்து வருகிறார். சொந்த நாட்டின் நலன் கருதி அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளை குறைகூற முடியாது.
அந்த வரிசையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாணவர் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மாணவர்களின் விசாவை ரத்து செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.