புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் 'கர்த்தவ்யம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜக்தீப் தன்கர், அரசியலமைப்பு பதவிகள் அலங்காரத்துக்கானதாக இருக்கலாம் என்று சிலர் சமீபத்தில் கூறியது நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சரியமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு குடிமகன் மிக உயர்ந்தவர். ஏனென்றால் எந்த ஒரு நாடும் ஜனநாயகமும் குடிமக்களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் ஆன்மா ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இடம் பெற்றுள்ளது.