புதுடெல்லி: வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதேபோல் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம். இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைத் தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் அவிமுக்தேஷ்வரானந்த் முதன்முறையாக துறவிகள் சார்பில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளார்.