பெங்களூரு: கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை (KTPP) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சட்டத் திருத்தம் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.