சென்னை: அரசு துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 20.12.2024 முதல் 29.12.2024 வரை (25.12.2024 தவிர) கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 30 தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இத்தேர்வின் முழுவதும் கொள்குறி வகையிலான தேர்வுகளின் உத்தேச விடை குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன (75 தேர்வு குறியீடுகள்) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துறைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய கொள்குறி வகை தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள், அதாவது வருகிற 27ம் தேதி மாலை 5.45 மணிவரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர் தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால், அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசு துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு: ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.