புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வசித்து வரும், தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழலில், தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சந்திரசூட் விளக்கியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து உச்ச நீதிமன்றத்தின் வீட்டுவசதி தொகுப்புக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த பங்களாவில் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.