2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான சு.திருநாவுக்கரசர் 1977 தொடங்கி 1996 வரை தொடர்ச்சியாக 6 முறை அறந்தாங்கி தொகுதியை வென்றவர். அமைச்சர், துணை சபாநாயகர் என ஒரு ரவுண்டு வந்தவர், ஒருகட்டத்தில் தனிக் கட்சி தொடங்கியும் அறந்தாங்கியில் ஆதிக்கம் செலுத்தினார். பின்னர், பாஜக-வில் இணைந்து மத்திய அமைச்சராகவும் வலம் வந்த அரசர், பிற்பாடு காங்கிரஸில் இணைந்து மாநில தலைவர் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டார்.