* தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும் – இஸ்ரேல் எச்சரிக்கை, l மத்திய கிழக்கில் போர் முற்றுகிறது
துபாய்: அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியதோடு, இந்த மோதலை இனியும் தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் என எச்சரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவுடன் ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக இரு நாடுகளும் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. அதே சமயம் கடந்த 2018ல் அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்த பிறகு, ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி யுரேனியத்தை அதிகளவு செறிவூட்டி வருகிறது. அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும்.
இந்த அளவை ஈரான் நெருங்கியிருப்பதாகவும் இன்னும் ஓரிரு மாதத்தில் அணு ஆயுதத்தை தயாரித்து விடும் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்தால் அது இஸ்ரேலை அழிக்க முயற்சிக்கும் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரானின் அணு சக்தி மையங்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டிலேயே இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு ரகசிய டிரோன் தளத்தை அமைத்து அதன் மூலம் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி தாக்குதல் நடத்தியது.
மேலும் 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு 100 இலக்குகளில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் சேதமடைந்துள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்த அணுசக்தி மையத்தின் மின்சார விநியோக கட்டமைப்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதுதவிர போர்டோ, இஸ்பஹான் ஆகிய அணு மையங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானின் ராணுவ படை தலைவர் முகமது பகேரி, துணை ராணுவ புரட்சிகர படை தலைவர் சலாமி, ஏவுகணை தலைவர் ஹஜிசாதே மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவிலும், நேற்று அதிகாலையிலும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை நோக்கி 200க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின் அயர்ன்டோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலையே இடைமறித்து தாக்கினாலும், பல ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளை தகர்த்தன.
இதனால் டெல் அவிவ்வை ஒட்டிய மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள ரிஷான் லெஷியான் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மத்தியில் குண்டுகள் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்டது. இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு 10 நிமிடங்கள் முன்பாக செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை தகவலை இஸ்ரேல் ராணுவம் அனுப்பியதால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். ஈரானின் இந்த தாக்குதலில் 4 பேர் பலியானதாகவும் 80 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
4 வீடுகள் கடுமையாக சேதமடைந்திருப்பதாக இஸ்ரேல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் இரவு முழுவதும் சைரன் சத்தங்களும் வானில் ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டதில் வெடி சத்தங்களும் கேட்டபடி இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஈரானின் ஏவுகணைகளை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக இஸ்ரேல் நேற்றும் ஈரான் மீது 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. ஈரானும், இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை மேலும் தீவிரமாக்கக் கூடாது என இரு நாடுகளையும் உலக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நேற்று இரவிலோ, இன்று அதிகாலையிலோ ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் ஈரானை எரித்து விடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் இனியும் காத்துக் கொண்டிருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
* தெஹ்ரான் மீது சுதந்திரமாக பறக்கும் இஸ்ரேல் விமானங்கள்
ஹமாஸ் விவகாரத்தில் ஏற்கனவே ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போதே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேல் சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் அதிகாலை நடந்த தாக்குதலில் மேற்கு ஈரானில் உள்ள ஒட்டுமொத்த வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துள்ளது. இதனால் தற்போது ஈரான் வான்வெளியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சுதந்திரமாக பறப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் டெப்ரின் அளித்த பேட்டியில், ‘‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் வான்வெளி இனி பாதுகாப்பு இல்லாதது. டெஹ்ரானை நாங்கள் சுதந்திரமாக எளிதாக சென்றடைவோம். நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள் பங்கேற்றன.
தலைநகர் தெஹ்ரான் வான் பகுதியில் எங்கள் விமானங்கள், டிரோன்கள் இரண்டரை மணி நேரம் பறந்தன. பல மாதங்களாகத் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த தாக்குதல் மூலம் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி முயற்சியை சீர்குலைத்துள்ளோம். அவர்களின் அணு ஆயுத முயற்சியை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தள்ளிப் போகச் செய்திருக்கிறோம்’’ என்றார்.
* 80 பேர் சாவு
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே ஈரானில் 78 பேர் கொல்லப்பட்டதாக ஐநா பிரதிநிதி கூறியிருந்தார். 350 பேர் காயமடைந்திருந்தனர். நேற்றைய 2வது தாக்குதலில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
* அணு விஞ்ஞானிகள் 9 பேர் பலி
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் முக்கியமான 9 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 9 பேரும் அணு ஆயுத தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என கூறி உள்ளது.
* ட்ரூ பிராமிஸ் 3
ஈரானின் அணுசக்தி ஆயுத திட்டங்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லைன்’ என பெயர் சூட்டி உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் தாக்குதலுக்கு ‘ட்ரூ பிராமிஸ் 3’ என பெயரிடப்பட்டுள்ளது.
* இந்தியாவின் கவலைகள் நியாயமானவை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பினை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா மத்தியஸ்தம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா எங்களின் நல்ல நண்பர். உங்கள் கவலைகளை நாங்கள் கவனமாகக் கேட்கிறோம்.
அவை நியாயமானவை என்று நான் நினைக்கிறேன். இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்துடன் ஈரானிய அதிகாரிகளின் ரகசிய குழு அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தலைவர் காமெனி மீண்டும் மீண்டும் கூறினார். இந்த உடனடி அச்சுறுத்தலை நாங்கள் அகற்ற வேண்டியிருந்தது.
அதனால், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி தளங்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் 3 ஆண்டில் 10,000 ஏவுகணையும், 6 ஆண்டுகளில் 20,000 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த அணுசக்தி அச்சுறுத்தலை தடுக்க இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணியை முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.
* இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள்
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் முற்றி உள்ள நிலையில் இரு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அங்குள்ள தூதரகங்கள் மூலமாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* அமெரிக்காவுடன் பேச்சு அர்த்தமற்றது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘ஈரானுக்கு இது 2வது வாய்ப்பு. இதுவே மிகவும் தாமதம். இனி இருப்பதை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் விரைவில் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வேண்டும். அதற்கு 60 நாள் அவகாசம் தருகிறேன். ’’ என கூறி உள்ளார்.
ஆனால், இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து இனியும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசுவது அர்த்தமற்றது என ஈரான் கூறி உள்ளது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்தாகி உள்ளது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்மதமும் இல்லை என அமெரிக்கா ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* பதில் தாக்குதலை ரசித்த ஈரான் மக்கள்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலை அந்நாட்டு மக்கள் ரசித்து பார்த்தனர். இந்த தாக்குதல் காட்சிகளை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. தலைநகர் டெஹ்ரானில் பொதுஇடத்தில் அமைக்கப்பட்ட பெரிய திரைகளில் தாக்குதல் காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றை பொதுமக்கள் கால்பந்து போட்டியை ரசிப்பது போல கைதட்டி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
தெஹ்ரானில் டாக்சி ஓட்டுநர் 29 வயதான மஹ்மூத் டோரி கூறுகையில், ‘‘இஸ்ரேல் எங்கள் ராணுவ தளபதிகளை கொன்றுள்ளது. அதற்கு ஈடாக அவர்களுக்கு முத்தமா தர முடியும்? கண்ணுக்கு கண். அவர்கள் தாக்கினால் மீண்டும் பதிலடி தர வேண்டும்’’ என்றார். ஆனாலும் இஸ்ரேல் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தெஹ்ரானில் பல தெருக்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
* அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த உதவினால், தங்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் ராணுவ தளங்கள் மற்றும் கப்பல்கள் குறிவைக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட அரசு அறிவிப்பில், ‘இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை தடுப்பதில் பங்கேற்கும் எந்தவொரு நாடும் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். வளைகுடா நாடுகளில் உள்ள அந்த நாடுகளின் ராணுவத் தளங்கள், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் உள்ள கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை ஈரானியப் படைகள் குறிவைக்க நேரிடும்’ என கூறப்பட்டுள்ளது.
* விமான நிலையங்களை மூடிய இஸ்ரேல், ஈரான்
இருதரப்பு தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலும், ஈரானும் நேற்று தங்கள் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளன. விமான நிலையங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்றும் ஈரான் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதே போல, டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அண்டை நாடுகளான லெபலனான், ஜோர்டான், சிரியா ஆகியவை மூடப்பட்டிருந்த தங்கள் வான் வழியை நேற்று வழக்கமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்தன.
* மேலும் 2 ராணுவ அதிகாரிகள் பலி
ஏற்கனவே ஈரானின் 3 முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை துணை ஜெனரல் கோலம்ரிஷா மெஹ்ராபி, துணை ராணுவ செயல் அதிகாரி ஜெனரல் மெஹ்டி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர 2 போலீஸ் அதிகாரிகளும் பலியாகி உள்ளனர்.
The post அலைஅலையாக ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல்: ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.