ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை அடுத்து இயக்குநர் அட்லி, சல்மான் கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இதற்காக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் பட்ஜெட் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.
இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை அட்லி இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ. 175 கோடி சம்பளம் என்கிறார்கள். இதுமட்டுமின்றி படத்தின் லாபத்தில் 15 சதவீதம் பங்கு எனவும் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறது.