மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில் நாக்பூரில் வெடித்த வன்முறை 6 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் புனிதமான மத அடையாளப்பொருட்களை எரித்ததாக வதந்தி பரவியதையடுத்து மத்திய நாக்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு வன்முறை வெடித்தது. இதில், ஏராளமான கடைகள், வீடுகள்,வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.