துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கோப்பையை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி சொல்லி உள்ளதாக பாகிஸ்தான் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர்ந்து இந்திய அணி வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து பெற முடியாது என தெரிவித்தது. ‘நான்தான் கோப்பையை வழங்குவேன்’ என மோசின் நக்வி தெரிவித்தார். அதை இந்திய அணி ஏற்க மறுத்தது. இதையடுத்து மோசின் நக்வியின் அறிவுறுத்தலின் படி, அலுவலர் ஒருவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். இது சர்ச்சையானது.