ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு மழைக்காலங்களில் நீர் நிரம்பியதும் திறக்கப்படும் தண்ணீர் நாகலாபுரம், சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் கலந்து வருகின்றன. மக்களுக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை சேமிக்கும் வகையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரபாக்கத்தில் விவசாய பணிகளுக்கு நீராதாரமாக, ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை சேமிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கடந்த 1989ம் ஆண்டு சிட்ரப்பாக்கத்தில் ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணை சேதமடைந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு ரூ.3.42 கோடி மதிப்பில் தடுப்பணை மற்றும் அதன் கரைகளை பொதுப்பணி துறையினர் புதுப்பித்தனர்.
இதற்கிடையே கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர பகுதிகளான புத்தூர், நகரி, நாகலாபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஆந்திர மாநிலத்தில் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், சுருட்டப்பள்ளி அணைக்கட்டுக்கு வந்து, அங்கிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள சிட்ரப்பாக்கம் தடுப்பணையில் நிரம்பி வழிகிறது. இதனால் நடப்பாண்டில் விவசாய பணிகளுக்கும் ஊத்துக்கோட்டை, அனந்தேரி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post ஆந்திரா பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் சிட்ரப்பாக்கம் தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.