கனனாஸ்கிஸ்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. 4 நாள் மோதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இதற்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகம் முழுவதும் கூறி வருகிறார். அமெரிக்கா செய்த மத்தியஸ்தத்தால் தான் சண்டை நிறுத்தப்பட்டதாகவும், வர்த்தகத்தை வைத்து இந்தியா-பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் டிரம்ப் பல நிகழ்ச்சிகளில் கூறி உள்ளார்.
இதே போல, இஸ்ரேல்-ஈரான் போரையும் நிறுத்துவதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு பேசினார். ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை. இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள கனடாவின் கன்னாஸ்கிஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது காரணமில்லை என்றும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் தெளிவுபடுத்தி உள்ளார்.
இது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் பாதியிலேயே அதிபர் டிரம்ப் அமெரிக்கா சென்றதால் இந்த சந்திப்பை நடத்த முடியவில்லை. ஆனாலும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்பியதால், இரு தலைவர்கள் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
மே 6-7ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாத தளங்களை இந்தியா குறிவைத்ததாக பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் நடவடிக்கை அளவிடப்பட்டது, துல்லியமானது மற்றும் தீவிரமடையாதது என்பதை தெளிவுபடுத்தினார். பாகிஸ்தானில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். மே 9ம் தேதி இரவு பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடமிருந்து எச்சரிக்கை வந்ததாகவும், பாகிஸ்தான் அத்தகைய தாக்குதல் நடத்தினால் இந்தியா இன்னும் வலுவான எதிர் தாக்குதல் நடத்தும் என மோடி வான்சிடம் தெளிவுபடுத்தியதாக கூறினார்.
அதே போல, மே 9-10ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலளித்து பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அவர்களின் விமான தளங்கள் செயல்பட முடியாத அளவுக்கு வீழ்த்தப்பட்டதையும் மோடி கூறினார். இதன் காரணமாக, வலுவான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியாவை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில், எந்த இடத்திலும் இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான முடிவு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம், ஏற்கனவே உள்ள வழிகளைப் பயன்படுத்தியும், பாகிஸ்தானின் வற்புறுத்தலின் பேரிலும் எடுக்கப்பட்டது. பாகிஸ்தானை கையாள்வதில் இந்தியா எந்த மத்தியஸ்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது என்றும், இந்த விஷயத்தில் அரசியல் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
இதைத் தவிர, இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்து வரும் மோதல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ரஷ்யா-உக்ரைன் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் அமைதிக்கு அவசியம் என்றும், அதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இப்பிராந்தியத்தில் குவாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க பங்கிற்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இவ்வாறு மிஸ்ரி கூறி உள்ளார். கடந்த ஏப்ரல் 22ல் பஹல்காம் தாக்குதலுக்கு தனது இரங்கலையும், இந்தியாவுக்கு ஆதரவையும் தெரிவித்த பிறகு அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியுடன் பேசுவது இதுவே முதல் முறை.
* இப்ப புரிஞ்சிடுச்சு
பாகிஸ்தானுடனான போரை அமெரிக்கா கூறியதால் நிறுத்தவில்லை என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியதை கேட்டதும், அதிபர் டிரம்ப் இந்த விஷயத்தை முழுமையாக புரிந்துகொண்டதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் வெளியுறவு செயலாளர் மிஸ்ரி கூறி உள்ளார். இனிமேல் இந்தியா தீவிரவாதத்தை மறைமுகப் போராகக் கருதாது, மாறாக ஒரு போர் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்ளும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நீடிக்கிறது என்றும் மோடி டிரம்பிடம் கூறியதாக மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
* டிரம்ப் அழைப்பை நிராகரித்த மோடி
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மோடியை கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்கா வருகை தருமாறு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால் ஏற்கனவே உள்ள பயண அட்டவணை காரணமாக டிரம்பின் அழைப்பை ஏற்க முடியாது என மோடி கூறியதாக வெளியுறவு செயலாளர் மிஸ்ரி கூறி உள்ளார். அதே சமயம், இந்த ஆண்டு இறுதியில் குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தருமாறு டிரம்பை மோடி அழைத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்குச் செல்ல ஆர்வமாக இருப்பதாகக் கூறியதாக மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
* பாக். ராணுவ தளபதிக்கு டிரம்ப் தடபுடல் விருந்து
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட அசிம் முனீர், வெள்ளை மாளிகை அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளைமாளிகையில் கேபினட் அறையில் தடபுடல் விருந்து அளித்து வரவேற்றார். டிரம்ப்-முனீர் சந்திப்பில் ஈரான்-இஸ்ரேல் மோதல் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஈரானுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தையும் முனீர் எழுப்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* ‘போரை நான்தான் நிறுத்தினேன்’ இவ்வளவு சொல்லியும் கேட்காத அதிபர் டிரம்ப்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி 35 நிமிடங்கள் விளக்கம் அளித்த பிறகும், அதிபர் டிரம்ப் இந்தியா, பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக மீண்டும் நேற்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘‘போர் நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் தரப்பில் முக்கிய பங்கு வகித்தவர் முனீர். இந்தியா தரப்பில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுத்தனர். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். மோடி ஒரு அற்புதமான மனிதர். நேற்றிரவு அவருடன் போனில் பேசினேன். இந்தியாவும் பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். அவர்களுக்கு இடையேயான போரை நான் நிறுத்தினேன்’’ என கூறி உள்ளார்.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்கா கூறியதால் போரை நிறுத்தவில்லை: பாக். கெஞ்சியதாலேயே தற்காலிகமாக நிறுத்தம்; அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி விளக்கம் appeared first on Dinakaran.