உக்ரைன் மேற்கொண்ட ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், இது பலனளிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் கடந்த 1-ம் தேதி ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 விமானங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. உக்ரைனின் இந்த தாக்குதல் ரஷ்யாவை அதிர்ச்சியடைச் செய்தது.