சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தன்னுடைய மனைவி ஜமுனா விற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் ஜமுனா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார்.
மகப்பேறு பார்க்க மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும். இரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும்: அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.