சென்னை : ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2-ம் நிலை தேர்வு இன்று நடைபெற இருந்தது. 4 மையங்களில் நடைபெற இருந்த தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டு இளைஞர்கள் தெலுங்கானா சென்றனர். இந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.எந்த முன்னறிவிப்பும் இன்றி கடைசி நிமிடத்தில் தேர்வை ரத்து செய்ததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பரிதவித்தனர். குறிப்பாக பல ஆயிரம் கி.மீ. கடந்து தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு மாணவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகினர்.
முன்கூட்டியே தேர்வை ஒத்திவைத்திருந்தால் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும் என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு என்று மட்டுமே கூறி தேர்வை ரத்து செய்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டினர். அது மட்டுமல்லாமல், 2வது ஷிப்ட் தேர்வு நடைபெறுமா? ரத்தா? என்று குழப்பம் நீடிப்பதால் தேர்வர்கள் தவிர்ப்பிற்கு உள்ளாகி உள்ளனர். முன்னதாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது. தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்குமாறு ஒன்றிய அரசுக்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனால், வேறொரு தேர்வு நடப்பதால் தமிழ்நாட்டில் மையம் ஒதுக்க முடியாது என கூறியிருந்தது ரயில்வே தேர்வு வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.