மதுரை: “ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார பீரங்கியாகவே பிரதமர் மோடி செயல்படுகிறார். கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க மலைவாழ் மக்களை விரட்டுகின்றனர்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24-வது அகில இந்திய மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.