
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆனாலும் இப்போது வரை எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே தொடரும் இழுபறி, அவர்களுக்கு பாதகமாக மாறுமா எனப் பார்ப்போம்.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள். மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 9 தொகுதிகளிலும் வென்றது. இந்தச் சூழலில்தான் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், பாஜக கூட்டணி மற்றும் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

