“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் இடதுசாரி சிந்தனையாளர்கள் விரவி இருக்கிறார்கள். இங்குள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி தொகுதிகளை ஏற்கெனவே சிபிஐ வென்றுள்ளது. அதேபோல், கடந்த தேர்தலில் கந்தவர்வக்கோட்டையை சிபிஎம் கைப்பற்றி உள்ளது. சொல்லப்போனால், கடந்த முறை கந்தவக்கோட்டையை சிபிஎம் கேட்கவே இல்லை. கடைசி நேரத்தில் தான் இந்தத் தொகுதியை சிபிஎம்-முக்கு டிக் அடித்தது திமுக. இதையடுத்து, முன்பு மக்கள் நலக் கூட்டணியில் இங்கு போட்டியிட்ட சின்னதுரையையே வேட்பாளராக நிறுத்தியது சிபிஎம். அவரை ஜெயிக்க வைத்தது திமுக.