சென்னை மாநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30 சிறுகால்வாய்கள் உள்ளன. இவை மழை காலங்களில் வெள்ளநீர் வடிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு எந்த மாநகரிலும் இதுபோன்று வடிகால் வசதிகள் இல்லை.
இந்த கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி நீண்ட கால ஆக்கிரமிப்புகள், கட்டுப்பாடு இன்றி கட்டுமானக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டதால், அவற்றின் அகலம் குறைந்து, மழைநீர் கொள்திறனும் குறைந்தது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. நிலைமையை உணர்ந்த அரசுத்துறைகள் பின்னர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, கால்வாய்களை அகலப்படுத்தின.