‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்ததாக வெளிவரும் செய்திகள் கவலையளிக்க கூடியதாகும். அரசுத் துறை சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த திட்டம்.
கடந்த ஜூலை முதல் வரும் நவம்பருக்குள் 10,000 முகாம்கள் நடத்தி மக்களிடமிருந்து மனுக்களைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 13 துறைகள், 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 14 துறைகள், 46 சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், பட்டா மாறுதல், சாதிச் சான்று, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு அட்டை என பல்வேறு முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன.