சென்னை: ஆர்.என்.ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கணேஷ் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.