சென்னை:ஆள் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவுப்படி கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராமிடம் போலீசார் 18 மணி நேரம் தொடர் விசாரணைக்கு பிறகு. திடீரென பிஎன்எஸ் 35(1) (ஏ)(பி) சட்டப்பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் விடுவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் (23). இவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா ஸ்ரீ (21) என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து கடந்த மாதம் 15ம் தேதி பதிவு திருமணம் செய்துள்ளார்.
காதல் திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல்நிலையங்களில் புகார் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில், களாம்பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திரசந்த் (18) என்பவரை கடந்த 7ம் தேதி ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் பயன்படுத்தும் சைரன் வைத்த அரசு வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்தி சென்று சிறிது நேரம் மீண்டும் அதே இடத்தில் இந்திரசந்தை விடுவித்து சென்றனர்.
இந்த கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பின்னணியில் இருப்பதாக கடத்தப்பட்ட இந்திர சந்த் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி ஜெகன் மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெகன் மூர்த்தி மற்றும் கூடுதல் டிஜிபி ஜெயராம் ஆகியோர் நீதிபதி வேல்முருகன் முன்பு ஆஜராகினர்.
மக்கள் பிரதிநிதியான ஜெகன் மூர்த்தியை கடுமையாக நீதிபதி கண்டித்தார். மேலும், இந்த ஆள் கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்திலேயே திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் நரேஷ் தலைமையிலான போலீசார் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி, திருத்தணி டிஎஸ்பி கந்தன், விசாரணை அதிகாரியான திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் நரேஷ் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
காதல் விவகாரத்தில் கடத்தல் கும்பலுக்கும் உங்களுக்கு என்ன தொடர்பு, கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காவலர் மகேஸ்வரியை உங்களுக்கு எப்படி தெரியும், ஜெகன் மூர்த்தியிடம் கடத்தல் விவகாரம் தொடர்பாக என்ன பேசினீர்கள், இதற்காக பெரிய அளவில் பணம் கைமாறியதா, காதல் விவகாரத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, இதில் உங்கள் பங்கு என்ன என்பது உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கேள்விகளை கூடுதல் டிஜிபி ஜெயராமிடம் விசாரணை அதிகாரிகள் அடுக்கடுக்காக கேட்டனர்.
அதற்கு கூடுதல் டிஜிபி ஜெயராம் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணையின் இடையே நேற்று அதிகாலை 4 மணிக்கு கூடுதல் டிஜிபி ஜெயராமை விசாரணை அதிகாரிகள் திருத்தணி டிஎஸ்பி கந்தன் முகாம் அலுவலகத்திற்கு மாற்றி விசாரணை நடத்தினர். அதேநேரம், ஆள் கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி நேற்று காலை 10 மணிக்கு திருவாலங்காடு காவல் நிலையத்தில் 2 வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார்.
அப்போது திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி மற்றும் விசாரணை அதிகாரி நரேஷ் ஆகியோர் ஜெகன் மூர்த்தியிடம் காதல் விவகாரத்திற்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம், கடத்தலில் ஈடுபடும் அளவுக்கு உங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார், எதற்காக வக்கீல் சரத்குமாரை அனுப்பினீர்கள், கூடுதல் டிஜிபி ஜெயராம் உங்களிடம் தொலைபேசியில் பேசியது உண்மையா, பேசியது உண்மை என்றால், என்ன பேசினார், இதற்காக ஏதேனும் உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா, இளம்பெண்ணின் தந்தை கொடுத்த ரூ.25 லட்சத்தில், உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, கூடுதல் டிஜிபிக்கும் உங்களுக்கு என்ன தொடர்பு, மகாலட்சுமி உங்களுக்கு எப்படி தெரியும், இதுபோல் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளீர்களா, அதில் ஏடிஜிபிக்கும் பங்கு உண்டா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ஜெகன் மூர்த்தி அளித்த பதிலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
பின்னர் கடத்தல் சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தியிடம் நேரடியாக வைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக திருத்தணி டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் இருந்து கூடுதல் டிஎஸ்பி ஜெயராமை, டிஎஸ்பி கந்தன் நேற்று மதியம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அப்போது ஜெகன் மூர்த்தி மற்றும் கூடுதல் டிஜிபி ஜெயராமிடம் நேரடியாக கடத்தல் தொடர்பாக இருவருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், பேனில் பேசிய விவகாரம் தொடர்பாகவும் நேரடியாக கேள்விகளை விசாரணை அதிகாரிகள் முன் வைத்தனர்.
இந்த விசாரணையின் போது திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உடன் இருந்தார். அப்போது ஜெகன் மூர்த்தி மற்றும் கூடுதல் டிஜிபி ஜெயராம் ஆகியோர் முன்னாள் காவலர் மகேஸ்வரி மூலமே இந்த பிரச்னை எங்கள் கவனத்திற்கு வந்ததாகவும், தனிப்பட்ட வகையில் எங்களுக்கு இந்த ஆள் கடத்தல் விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது விசாரணை அதிகாரிகள் கூடுதல் டிஜிபி பயன்படுத்தும் வாகனம் எப்படி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் டிஜிபி அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
ஆள் கடத்தல் தொடர்பாக கூடுதல் டிஜிபி ஜெயராமிடம் போலீசார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே போல் ஜெகன் மூர்த்தியிடம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றம் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், இருதரப்பு வாக்குமூலங்களை விசாரணை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே ஆள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்திரசந்த் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரை எழுத்து மூலமாக திரும்ப பெற்றார். அப்போது எங்களை யாரும் மிரட்டவில்லை. நாங்கள் சுயமாக இந்த புகாரை திரும்ப பெறுகிறோம் என்று கடிதம் மூலம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து ஆள் கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராம் மற்றும் புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரை போலீசார் பிஎன்எஸ் 35(1)(ஏ)(பி) பிரிவின் கீழ், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இருவரும் நேரில் வர வேண்டும் என்று உத்தரவுப்படி விடுவித்தனர். முன்னதாக கூடுதல் டிஜிபி ஜெயராமை நேற்று மாலை 6 மணிக்கு விசாரணை அதிகாரிகள் விடுவித்தனர். அதனை தொடர்ந்து கூடுதல் டிஜிபி ஜெயராம் தனது சொந்த வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அரைமணி நேர இடைவேளையில் ஜெகன் மூர்த்தி விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றார். ஆள் கடத்தல் வழக்கில் காதல் திருமணம் செய்த தேனியை சேர்நத் விஜயா ஸ்ரீ தந்தை வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47), மகேஸ்வரி(50), வழக்கறிஞர் சரத்குமார்(40) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* யாரையும் விடுவிக்கவில்லை தேவைப்பட்டால் அழைப்போம்
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தி உள்ளோம். நாங்கள் யாரையும் விடுவிக்கவில்லை. 35(1)(ஏ)(பி) பிரிவின் படி நிபந்தனையுடன் அனுப்பியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.
* உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், கூடுதல் டிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல்புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் கூடுதல் டிஜிபி ஜெயராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், ‘‘தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கூடுதல் டிஜிபி ஜெயராமுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.
எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோன்று கைது நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் சூழலை கருதி மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் டிஜிபி ஜெயராம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக நாளை( இன்று) விசாரிக்க உத்தரவிட்டனர்.
The post ஆள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் 18 மணி நேர விசாரணைக்கு பிறகு ஏடிஜிபி ஜெயராம் விடுவிப்பு: ஜெகன் மூர்த்தியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது; பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.