சென்னை: தமிழகத்தில் இணைநோய் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுவர்கள் விரைவில் குணமடைகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம், மகாராஷ்டிராவில் 17, கேரளாவில் 11, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 7 பேர், தமிழகத்தில் 4 பேர் என மொத்தம் 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.