ஒரு நாட்டின் அணி உலகக்கோப்பையை வெல்கிறது அதைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. ஆனால் ஒரு பிராந்திய அணி அதுவும் பிராந்திய வீரர்களுக்கு இடமளிக்காத உலக வீரர்களையும் பிற மாநில வீரர்களையும் வைத்து நடத்தப்படும் பணமழை ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக ஏதோ பெரிய சாதனை போல் அதைக் கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இருக்காது. 11 பேர் உயிரைப் பலி வாங்கிய கொண்டாட்டம் தேவைதானா என்று அனைவரும் கேள்வி எழுப்ப, 1983 உலகக்கோப்பை வென்ற அணியிலிருந்த மதன்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
ஆர்சிபி கொண்டாட்டங்களினால் 11 பேர் பலியாகி 33 பேர் காயமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் கிரிக்கெட் ஒரு மதமாகவும் வீரர்கள் தெய்வங்களாகவும் வழிபடும் ஒரு மவுட்டீகமான போக்கு நிலவுவதே இத்தகைய துயரமான சம்பவங்களுக்குக் காரணம். இத்தகைய கொண்டாட்டம் தேவையா என்ற கேள்விக்கு ஆர்சிபி வீரர்களிடத்திலோ, உரிமையாளரிடத்திலோ, ஆளும் கட்சியினிடத்திலோ பதில் இல்லை.