மும்பை: இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப் மீண்டும் பெற்றுள்ளது. கடந்த 2024 அக்டோபர் 29-ம் அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் எம்ஆர்எப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றது.
ஒரே அமர்வில் வியக்க வைக்கும் அளவில் எல்சிட் பங்கின் விலை 66,92,535 சதவீதம் உயர்ந்து ரூ.2,36,250 ஆனது. பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு நிறுவன பங்கின் விலை வெறும் ரூ.3.53-லிருந்து ஒரே வர்த்தக நாளில் ரூ.2,36,250-ஆக அதிகரித்தது அதுவே முதல்முறை.