மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவன தொழிற்சாலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்பத்தியை தொடங்கிவைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோத்ரெஜ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் உற்பத்திக்கான அதிநவீன ஆலையை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டத்தை, தமிழ்நாட்டில் அமைத்ததில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதைவிட இரண்டு மடங்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் உங்களின் தொழில் நிறுவனத்தை நிறுவுவது, தமிழ்நாட்டின் மேல் நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் வெளிப்பாடு.