கராச்சி: இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலால் ராணுவத்திற்கு கூடுதலாக 18% நிதி ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதால், அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் தடுமாறும் என்கின்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ெதாடர்ந்து பாகிஸ்தானுக்கு பல்வேறு ராணுவ பதிலடிகளை கொடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. அட்டாரி எல்லையை மூடியது. தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. இதனால் பாகிஸ்தான் நெருக்கடிகளை தற்போது சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கூட்டணி அரசு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருவதால், இந்தாண்டுக்கான ராணுவ பட்ஜெட்டில் அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
பாகிஸ்தானின் ராணுவத்தை நவீனமயமாக்கல் மற்றும் சீனாவுடனான ஸ்டெல்த் ஜெட் மற்றும் தண்டர் விமானங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் 38% ஐ தாண்டிய பணவீக்கத்தின் மத்தியில், ராணுவத்திற்கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட் 17.5 டிரில்லியன் ரூபாயாக இருக்க, கடனுக்கு மட்டும் 9.7 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் இந்த தொகை மிகப்பெரிய செலவினமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ராணுவத்திற்கான ஒதுக்கீடு உள்ளது. 2025-26ம் நிதியாண்டின் பட்ஜெட்டில், ராணுவ செலவினங்களுக்கான தொகையை 18% உயர்த்தி, 2.5 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், ‘இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான செலவின தொகையை உயர்த்துவதால் சமூக நலத்திட்டங்களுக்கான தொகையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மேம்படாமல், ராணுவத்திற்காக வீண் செலவு செய்யப்படுகிறது. இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தி, பாதுகாப்பு செலவினங்களை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி 11% வட்டி விகித குறைப்பு காரணமாக பட்ஜெட் அளவு 18 டிரில்லியனை விட குறைவாக இருக்கும். ஆனால் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினர்.
The post இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலால் பாக். ராணுவத்திற்கு 18% கூடுதல் நிதி ஒதுக்கீடு: பொருளாதார நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும் appeared first on Dinakaran.