வாஷிங்டன்: “இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. இதனால் இந்தியா – அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேச பல முறை முயன்றதாகவும், ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நெருக்கமாக உரையாடினர். இந்த போட்டோ உலகம் முழுவதும் வைரலாக பரவியது.