சென்னை: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் தெரிவித்தார்.
தென்னிந்திய வர்த்தக தொழில் சபை, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (கைடன்ஸ் தமிழ்நாடு), ஜெர்மனியின் பிவிஎம்டபிள்யூ சங்கம் சார்பில் இந்தியா – ஜெர்மனி இடையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கி, இந்தோ – ஜெர்மன் எம்எஸ்எம்இ உறவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.