காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த சில நாள்களாக எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றத்தின் மையம்: இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நீண்ட காலப் பதற்றத்தின் மையமாக காஷ்மீர் உள்ளது. 1947இல் இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. முஸ்லிம் மக்களை காஷ்மீர் அதிகம் கொண்டிருந்தாலும், அதன் அரசராக இந்து மதத்தைச் சேர்ந்த ஹரி சிங் இருந்தார். இதனால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்கிற குழப்பம் அரசருக்கு ஏற்பட்டது.