போர்ட் லூயிஸ்: “இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான். நமது உறவுக்கு எல்லைகள் இல்லை. நமது உறவுகள் குறித்த நமது நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு எல்லைகள் கிடையாது.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மொரீஷியஸ் பிரதமர் நவீனசந்திர ராம்கூலம் அளித்த இரவு விருந்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.